Saturday, August 7, 2010

107-முப்பத்தாறு குணங்கள்

'தருமா..அறம்..பொருள்..இன்பம்..இம்மூன்றையும் காலத்திற்கேற்றபடி போற்ற வேண்டும்.காலம் அரசனுக்குக் காரணமா..அல்லது அரசன் காலத்துக்குக் காரணமா என்ற சந்தேகம் உனக்கு வரக்கூடாது.அரசன் தண்ட நீதியை நன்றாகச் செலுத்தி வந்தால்...அச்சமயத்தில் கிருதயுகம் நடைபெறுவதாக உணர வேண்டும்.அப்போது மக்கள் மனதிலும் தருமமே நிலைத்திருக்கும்.அதர்மம் தலை காட்டாது. மக்கள் நோயின்றி நீடு வாழ்வர்.மக்களின் குரலும்,நிறமும்,மனமும் தெளிவாக விளங்கும்.அக்காலத்தில் பெண்கள் விதவைகளாக ஆவதில்லை.கொடிய மனிதர்கள் உண்டாக மாட்டார்கள்.உழவு இன்றியே பூமி பயன் தரும்.இவை கிருதயுக தருமம்.அரசன் தண்ட நீதியின் ஒரு பாகத்தைத் தள்ளிவிட்டு மற்ற மூன்று பாகங்களையும் தொடர்ந்து செய்யும்போது திரேதாயுகம் நடைபெறும்.அக் காலத்தில் தருமத்தில் மூன்று பாகமும் அதருமத்தில் ஒரு பாகமும் கலந்து நிற்கும்.அந்தக் காலத்தில் உழுதால்தா பூமி பயனைத் தரும்.

அரசன் தண்ட நீதியின் பாதி பாகத்தை நீக்கிவிட்டுப் பாதி பாகத்தைத் தொடந்து நின்றால் துவாபாரயுகம் நடைபெறும்.அக்காலத்தில் இரண்டு பாகம் புண்ணியமும், இரண்டு பாகம் பாவமும் கலந்து நடைபெறும்.அப்போது உழுது பயிரிட்டாலும் பூமி பாதி பயனைத்தான் தரும்.அரசன் தண்ட நீதியை முழுவதுமாகக் கைவிடின் கலியுகம் நடைபெறும்.கலியுகத்தில் எங்கும் அதர்மமே தலை விரித்து ஆடும்.தருமத்தை காண முடியாது.நான்கு வருண தருமங்கள் சிதறிப் போகும்.வியாதிகள் பெருகும்.ஆடவர் அகால மரணமடைவர்.மகளிர் விதவை ஆவர்.ஆகவே தருமா, நான்கு யுகங்களுக்கும் காரணன் என உணர்ந்து நாட்டை நன்கு காப்பாயாக' என்றார் பீஷ்மர்.



தருமர்..'இம்மையிலும்..மறுமையிலும் அரசனுக்கு நன்மை தரக்கூடிய குணங்கள் யாவை?'என்று பீஷ்மரிடம் கேட்க..

பீஷ்மர் சொல்கிறார்..'ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.அவை

1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்

2) பரலோகத்தில் விருப்புடன் நட்புப் பாராட்டுதல்

3)அறவழியில் பொருளை ஈட்டுதல்

4)அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்

5)யாருடனும் அன்புடன் பேசுதல்

6)நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்

7)தற்புகழ்ச்சியின்றி இருத்தல்

8)கருணையுடன் இருத்தல்

9)கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்

10)பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்

11)நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராது இருத்தல்

12)பிறர்க்குத் துன்பம் தராது பணி புரிதல்

13)சான்றோரிடம் பயனை அறிவித்தல்

14)பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்

15)துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்

16)தக்காரைச் சார்ந்திருத்தல்

17)நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்

18)ரகசியத்தை வெளியிடாதிருத்தல்

19)உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்

20)தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்

21)அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்

22)தூய்மையுடன் இருத்தல்

23)பல பெண்களுடன் சேராதிருத்தல்

24)நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்

25)வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்

26)வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்

27)அடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்

28)பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்

29)பணிவுடன் பணி புரிதல்

30)காலம் அறிந்து செயல் படுவதில் வல்லவனாய் இருத்தல்

31)பயனுள்ளவற்றையே பேசுதல்

32)தடை சொல்லாது உதவி புரிதல்

33)குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்

34)பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்

35)காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்

36)தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை

ஆகியவையாகும்..

( பீஷ்மரின் அறிவுரை தொடரும்)

No comments:

Post a Comment