Friday, August 20, 2010

108-மனக்கவலை மறைய..

தருமர்..'மனதில் கவலை அற்றிருக்கவும்,அறநெறி பிறழாதிருக்கவும் வழி யாது? என வினவ பீஷ்மர் விடை அளிக்கிறார்..

தருமத்தில் நிலை பெற்றிருப்பவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களுமான சான்றோர்களை எங்கும் இருக்குமாறு செய்ய வேண்டும்.மேன்மை மிக்க புரோகிதர்களை எங்கும் நியமிக்க வேண்டும்.

நாணயம் மிக்க அறிவாளிகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும்.மூர்க்கரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் குடிகளை வருத்தி வரி வாங்குவார்கள்.பசுவிடம் பாலை கறக்க விரும்பினால் புல்லும்,நீரும் அளித்து பாலைக் கறக்க வேண்டும்.ஒரேயடியாக மடியை அறுத்தால் பாலைப் பெற முடியாது.அதுபோல தக்க உதவிகளைச் செய்து குடி மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும்.மக்களிடம் அதிக வரிச் சுமை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிப்பதில் மாலைக் கட்டுபவனைப் போல் இருக்க வேண்டும்.கரி வியாபாரி போல இருக்கக் கூடாது.(மாலை கட்டும் பூந்தோட்டக்காரன் செடி,கொடிகளைப் பக்குவமாக வளர்த்து இதமாக மலர்களை மட்டும் எடுப்பான்.கரி வியாபாரி மரத்தையே வெட்டிச் சாய்த்து விடுவான்)

குடிகள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.குடி மக்கள் ஒரு நாள் பயந்தாலும் அரசன் ஆயிரம் ஆண்டுகள் நரகத்தை அனுபவிக்க வேண்டி வரும்.அறநெறி கெடாமல் குடிமக்களைக் காத்த அரசன் அமரர் உலகில் பதினாயிரம் ஆண்டுகள் அந்தப் புண்ணியப் பயனை இன்பமாக அனுபவிப்பான்.யாகம்,தானம்,தவம் ஆகியவற்றைச் செய்தவன் அடையும் நற்கதிகளை ஒரு கணம் நாட்டை பரிபாலித்த அரசன் அடைவான்.இதனால் மன்னன் கவலை இல்லாதவனாக இருப்பான்.தருமா..இத்தகைய ஆட்சியை மேற்கொண்டு கவலையற்று இரு' என்றார் பீஷ்மர்.

(பீஷ்மரின் அறிவுரை தொடரும்)

1 comment:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..இங்க நான் வர இத்தனை நாள் ஆயிற்றே?

Post a Comment