Sunday, August 29, 2010

109-நண்பன்..பகைவன்..சுற்றம்..

தருமர், பீஷ்மரிடம் 'கங்கை மைந்தா..மனிதன் பிறரின் உதவியின்றி சிறிய செயலையும் செய்வது அரிதாக இருக்கிறது.அப்படியுள்ள போது பிறர் உதவியின்றி அரசாள்வது எப்படி? அரசனுக்கு உதவி செய்யும் மனிதன் எத்தகைய ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும்? அரசன் எப்படிப்பட்டவனுடன் நம்பிக்கை வைக்கலாம்..எவன் நம்பத்தகாதவன்' என்றெல்லாம் வினவினார்.

பீஷ்மர் சொல்கிறார்..'அரசர்களுக்கு சகார்த்தன் (இந்தச் செயலைச் செய்து இதன் பயனை இருவரும் அடைவோம்..என்று பேசிக்கொண்டு சேர்க்கப் பட்டவன்.)பஜமானன் (தகப்பன், பாட்டன் என பரம்பரை..பரம்பரையாய் உதவி செய்பவன்),சகஜன் (உறவினன்), கிருத்திரிமன் (உதவி செய்து ஏற்படுத்தப்பட்டவன்) என நான்கு வகை நண்பர்களுண்டு.நடுவு நிலைமை குன்றாதவன் ஐந்தாம் நண்பன்.அவன் யார் பக்கமும் சாராமல் அறம் உள்ள இடத்தையே சார்ந்திருப்பான்.தருமத்தை விரும்பும் அரசர் அவனை நாடலாம்.ஆனால் அவனுக்குத் தொடர்பில்லா விஷயத்தை அவனிடம் சொல்லக் கூடாது.அரசன் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக உடையவன்.அவன் சில நேரங்களில் அறம், மறம் இரண்டையுமே கைக் கொள்ள நேரிடும்.நட்பு,பகை என்பவை எப்போதும் ஒருவனிடம் இயற்கையாக அமைந்தவை அல்ல.ஒருவன் உபகாரத்தால் நண்பன் ஆவதும்,அபகாரத்தால் பகைவன் ஆவதும் இயல்பு.மேற்கூறிய நான்கு விதமான நண்பர்களில் இடையில் கூறிய பஜமானனும்,சகஜனும் உத்தமர்கள்.மற்ற இருவரும் சந்தேகத்திற்கு உரியவர்கள்.

அரசன் தானே நேரில் தன் பார்வையிலேயே நடத்தக்கூடிய செயலை மேற்சொன்ன ஐவரை நம்பி ஒப்படைக்கக் கூடாது.நண்பர்களிடம் அரசன் எப்போதும் எச்சரிகையுடன் இருக்க வேண்டும்.கவனக் குறைவாக இருக்கும் அரசனை மக்கள் மதிக்க மாட்டார்கள்.அவமதிப்பார்கள்.மனிதன் எப்போதும் ஒரே குணமுடையவனாக இருக்க மாட்டான்.நல்லவன் கெட்டவன் ஆகலாம்..கெட்டவன் நல்லவனாகலாம்.நண்பன் பகைவன் ஆகலாம்..பகைவன் நண்பன் ஆகலாம்.இது உலக இயல்பு.ஆகவே, அரசன் எப்போதும் யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது.முழுமையாக ஒருவனையே நம்பினால் அறம், பொருள்,இன்பம் அனைத்தும் நாசமாகும்.ஆனால் நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கக் கூடாது.அவநம்பிக்கையும் ஆபத்தைத் தரும்.எனவே நண்பர்கள் இயல்பை அறிந்து அவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

நல்ல தோற்றமும்,அழகும்,கம்பீரக் குரலும்,பொறுமையும்,நல் ஒழுக்கமும் உடையவன் முதல் அமைச்சனாகும் தகுதியுள்ளவன் ஆவான்.தருமா...அத்தகைய குணங்கள் உள்ளவனையே நீ முதல் அமைச்சனாகக் கொள்ள வேண்டும்.நல்லறிவு படைத்தவர்களையும்,நினைவாற்றல் மிக்கவர்களையும்,நல்ல இயல்பு உள்ளவர்களையும் ,தனக்குரிய மரியாதை கிடைக்காவிட்டாலும் மன வருத்தம் அடையாதவர்களையும் ஆகிய மேலோர்களை நீ உனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகழ் நோக்கம் உடையவனும்,நீதியை விரும்புபவனும்,காமம்,அச்சம்,சினம் இல்லாதவனும்,அதிகம் பேசாதவனும், தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்ளாதவனும் ஆகிய ஒருவனிடம் அமைச்சுப் பதவியைத் தர வேண்டும்.அறம்,பொருள் சிதறாமல் பாதுகாக்கும் உத்தமனை நீ தேர்ந்தெடுத்து உன் அருகில் அவனை இருக்கச் செய்ய வேண்டும்.ஒரு தந்தை மகனிடம் காட்டும் அன்பை நீ அவனிடம் செலுத்த வேண்டும்.ஆனாலும்..தருமா..ஒரு காரியத்திற்கு இரண்டு அல்லது மூவரை நியமிக்கக் கூடாது.அப்படி நியமித்தால் அவர்களுக்குள் பொறாமை தோன்றும்.ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள்.அதனால் காரியம் நிறைவேறாது.

மரணத்திற்கு அஞ்சுவதுபோல் சுற்றத்தாரைக் கண்டு பயப்பட வேண்டும்.அரசனின் பெருமைக் கண்டு சுற்றம் மகிழாது.சுற்றத்தாரால் துன்பமும் உண்டு.இன்பமும் உண்டு.சுற்றம் அல்லாதாரும் துன்பம் தருவர்.ஆனால் மன்னனுக்கு அவமதிப்பு நேர்ந்தால், அவனைச் சார்ந்த சுற்றத்தார் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.ஆதலால் சுற்றத்தாரிடம் குணம், குற்றம் இரண்டும் காணப்படுகின்றன.

சுற்றம் இல்லாதவன் மகிழ்ச்சியும், பெருமையும் அடைய மாட்டான்.எனவே, சுற்றத்தாரைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் கௌரவப் படுத்த வேண்டும்.அவர்கள் விரும்புவதைச் செய்ய வேண்டுமேயன்றி வெறுப்பதைச் செய்யக் கூடாது.அவர்களிடம் நம் உள்ளத்தில் நம்பிக்கையில்லாதிருந்தாலும் எப்போதும் நம்பிக்கை உள்ளவன் போல நடந்துக் கொள்ள வேண்டும்.குணமோ,குற்றமோ உறுதியாக அவர்களிடம் தீர்மானிக்க முடியாது.இவ்விதம் பகைவர்,நண்பன்,சுற்றத்தார் ஆகியோரிடம் விழிப்புடன் நடந்துக் கொள்ளும் மன்னன் நீடு புகழ் பெற்று திகழ்வான்' என்று உரைத்தார் பீஷ்மர்.

(பீஷ்மருடன் உரையாடல் தொடரும்)

1 comment:

அ.முத்து பிரகாஷ் said...

சார் ... சற்று முன்னர் உங்களுடன் பேச முடிந்தமை குறித்து மிகு மகிழ்ச்சிகள் ... அன்று தாங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியும் இன்றைய உங்களின் அலைபேசி உரையாடலும் பீஷ்மர் என்ற புராண கால கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு மனவெழுச்சி கொள்ளச் செய்தன ... நன்றி என்ற சொல் நீங்கள் விரும்பாதிருக்கக் கூடும் ... ஆனால் நான் கவிஞனல்ல புதிதாய் ஒன்றை சொல்ல ... நன்றி தோழர் !!! .... நல்லார் பலர் உளரேல் அவர்கள் பொருட்டு ....

Post a Comment